வாஷிங்டன், ஜூலை.24 –
பார்சிலோனாவின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் நெய்மார், அந்த கிளப்பில் நீடிப்பார் என அதன் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெராட் பிக்கே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நெய்மாரின் நிலை குறித்து தமது டுவிட்டரில் பதிவிட்ட பிக்கே, ” அவர் நீடிப்பார் ” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பார்சிலோனா அணி சனிக்கிழமை நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இத்தாலியின் யுவன்டஸ் அணியை 2- 1 என்ற கோல்களில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நெய்மார் இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார்.
25 வயதுடைய நெய்மாரை வாங்க பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் தயாராகி வருவதாக ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன. நெய்மாரை வாங்க 22 கோடி ஈரோ டாலரை வழங்க பாரிஸ் செயின் ஜெர்மைன் தயாராக இருப்பதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தொகையானது கால்பந்து உலகில் ஓர் ஆட்டக்காரருக்கு வழங்கப்படும் உச்ச பட்ச தொகையாக கருதப்படுகிறது. எனினும் நெய்மார், பிரான்சுக்கு செல்லவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை பார்சிலோனாவின் பயிற்றுனர் எர்னேஸ்டோ வல்வார்டே மறுத்துள்ளார்.
அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு பார்சிலோனா அணியில் நெய்மார் நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். பாரிஸ் செயின் ஜெர்மைன் கிளப்புடன் நெய்மார் இணைத்து பேசப்படுவது வெறும் வதந்தி என்றும் அவர் சொன்னார்.
