லிவர்புல், ஜன. 6 –
 இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்புல் தனது பரம வைரியான எவெர்டனை வீழ்த்தி 4 ஆவது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. அன்பீல்ட அரங்கில் நடைபெற்ற 3 ஆம் சுற்று ஆட்டத்தில் ,லிவர்புல் 2 – 1 என்ற கோல்களில் எவெர்டனை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் லிவர்புலின் வெற்றி கோலை புதிதாக வாங்கப்பட்ட தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வான் டாய்க் போட்டார். 35 ஆவது நிமிடத்தில் கேப்டன் ஜேம்ஸ் மில்னர் போட்ட பினால்டி கோலின் மூலம் லிவர்புல் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது.
எனினும் இரண்டாம் பாதியில் கில்பி சிகுர்ட்சன் போட்ட கோலின் மூலம் எவெர்டன் ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் வெர்ஜில் வான் டாய்க் போட்ட கோல் லிவர்புலின் வெற்றியை உறுதிச் செய்தது.
ஜனவரி மாதத்தில் 7 கோடியே 50 லட்சம் பவுண்ட் தொகையில் , வான் டாய்லக்கை சவுத்ஹாம்ப்டன் அணியில் இருந்து லிவர்புல் ஒப்பந்தம் செய்தது. தனது முதல் ஆட்டத்திலெயே கோல் போட்டு வான் டாய்க் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.