ஆம்ஸ்டர்டாம், பிப்.6 –
நெதர்லாந்து கால்பந்து அணியின் புதிய பயிற்றுனராக எவெர்டன் கால்பந்து கிளப்பின் முன்னாள் நிர்வாகி ரோனால்ட் கூமன் நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதுடைய ரோனால்ட் கூமன், டிக் அட்வோகாட்டுக்குப் பதில் நெதர்லாந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதிப் பெறவில்லை. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணப் போட்டியிலும் நெதர்லாந்து இடம்பெறவில்லை. 2014 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அரையிறுதி ஆட்டம் வரை தகுதிப் பெற்றிருந்த நெதர்லாந்து தற்போது மிகப் பெரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வி கண்ட நெதர்லாந்து அணியை மீண்டும் அதன் பொற்காலத்துக்கு இட்டு செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை கூமன் ஏற்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் எவெர்டன் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ரோனால்ட் கூமன் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.
இந்நிலையில் நெதர்லாந்தின் பயிற்றுனர் பொறுப்பை ஏற்றப் பின்னர் ரோனால்ட் கூமன் மார்ச் மாதம், இங்கிலாந்து , போர்ச்சுகல் அணிகளுக்கு எதிரான நட்புமுறை ஆட்டங்களை எதிர்நோக்கவுள்ளார். 2020 ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நெதர்லாந்து அணியை தகுதிப் பெற செய்வதே ரோனால்ட் கூமனின் முக்கிய இலக்காகும்.