அலோர் ஸ்டார், பிப். 14-

14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கெடாவைக் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பிகேஆர் நாடாளுமன்ற ஒருவர் கூறியுள்ளார்.  இதனைத் தெரிவித்த சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல், 2016இல் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் திடீரென்று பதவியிலிருந்து அகற்றப்பட்டு அகமட் பாஷா ஹனாபியா மந்திரி புசார் ஆக்கப்பட்டதிலிருந்து அந்த வட மாநிலத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்றார்.

தேசிய முன்னணி ஒரு புதிய மந்திரி புசாரைக் கொண்டுவந்தபோது நல்லது நடக்கும் என கெடா மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரிடம் கல்வித் தகுதியும் இல்லை, அவர் சிறந்த பணியாற்றுபவராகவும் இல்லை. அவர் ஒரு சரியான தேர்வு அல்ல என்பது தெளிவாகி விட்டது என ஜோஹாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

கெடா மக்கள் மாற்றத்துக்கு எதிரானவர்கள் அல்லர். பினாங்கு, கிளந்தான், திரெங்கானு, பேராக் சிலாங்கூர் மக்களைப்போல் அவர்களும் கடந்த காலத்தில் மாற்றத்தைக் கண்டவர்கள்தான் என அந்த பிகேஆர் ஆலோசகர் கூறினார். ஏற்கனவே ஒரு முறை மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் மீண்டும் அதை அங்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் சொன்னார்.

கெடா மக்கள் மாற்றத்தை விரும்பக் கூடும் என்பதற்கு இன்னொரு காரணம் விலைவாசி உயர்வும் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யுமாகும் என்றார். இப்போது இன்னொரு புது காரணமும் உள்ளது. அதுதான் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி வந்திருப்பது. இது கெடா மக்களை மாற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும்.

பிரிபூமி பெர்சத்து அவைத் தலைவரான மகாதீரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. முன்னாள் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினரான மகாதீர், எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. அவர் லங்காவியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில இடங்களும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

டாக்டர் மகாதீருக்கு 93 வயது ஆனாலும் கெடாவில் அவர் தனித்துவம் வாய்ந்த அடையாளச் சின்னம், குறிப்பாக மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார்.
அவரை ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலர் என்று நீங்கள் ஏசலாம் ஆனால், உருப்படியான மேம்பாடுகளைக் கொண்டு வந்தவர். செய்து காட்டியவர், என்று ஜோஹாரி கூறினார்.

அவர் பல நெடுஞ்சாலைகளை அமைத்தார், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டினார். ஜிஎஸ்டி இல்லாமலேயே அவற்றையெல்லாம் கட்டினார். மகாதீருக்கு கெடாவில் மிகுந்த செல்வாக்கு உண்டு. அது பக்காத்தானுக்கு உதவுகிறது என்றார். முன்பு, கெடாவில் சில பகுதிகளுக்குள் பக்காத்தான் செல்ல முடியாது. அம்னோ தீவிர ஆதரவாளர்கள் நிரம்பிய பகுதிகள் அவை. இப்போது முடிகிறது.

ஆனாலும், மாநில அரசைக் கைப்பற்ற கெடா மலாய்க்காரர்கள் ஆதரவு இன்னும் 10 விழுக்காடு கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதைப் பெறுவதுதான் ஹராப்பான் எதிர்நோக்கும் சவால் என ஜோஹாரி தெரிவித்தார்.