லிஸ்பன், பிப்.28 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜெர்மனி, அர்ஜெண்டினா, பிரேசில், ஸ்பெயின் கிண்ணத்தை வெல்லக்கூடிய தேர்வு அணிகளாக விளங்கும் என ரியல் மாட்ரிட்டின் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமாகிய ரொனால்டோ, தமது சொந்த அணியான போர்ச்சுகலை தேர்வு செய்யாததற்கு காரணமும் தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல் குழுப் பிரிவில் இருந்து இரண்டாவது சுற்றுக்கு தேர்வுப் பெற்றாலே சிறந்த முடிவாக இருக்கும் என ரொனால்டோ கூறினார். போர்ச்சுகல் இறுதி ஆட்டம் வரை செல்லும் என தம்மால் பொய் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். முடிந்தவரை குழுப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வுப் பெற போர்ச்சுகல் முயலும் என அவர் மேலும் சொன்னார்.

2016 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் ஐரோப்பிய கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது. போர்ச்சுகலின் இந்த வெற்றிக்கு ரொனால்டோ முக்கிய பங்காற்றினார். இம்முறை ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் ஸ்பெயின், மொராக்கோ, ஈரான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.