கும்பகோணம், ஜூலை 28-

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். இதற்காக போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விவசாயம் இல்லாமல் இந்த நாடு முன்னேறாது. விவசாயத்தை ஒழித்துவிட்டு பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும். அந்த பணத்தையா சாப்பிட முடியும்? என்பதை உணர்த்தும் விதமாக இலைகளில் பணத்தை வைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டனர். இன்று 18-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.