சமீபத்தில் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மனைவி உஷாவுடன் வந்த ராஜாவின் வாகனத்தை மறித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்ததில், ராஜாவும் அவரின் மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், 3 மாத கர்ப்பிணியான உஷா தலையில் அடிபட்டு உயிரிழந்தார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காமராஜின் செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் திருச்சி வந்த கமல்ஹாசன் அறிவித்தபடி, உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் உஷாவின் தாய் நூர்து மேரியிடம் ரூ.5 லட்சமும் மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கினார். அப்போது உஷாவின் கணவர் கமலிடம் கதறி அழுதார். கமலும் கண்கலங்கினார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் கோரிய மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, காமராஜின் ஜாமீனுக்கு, ராஜா எதிர்ப்பு தெரிவிக்கவே, வழக்கு 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.