மலாக்கா, ஆக. 2-

பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் சிசு கிணற்றில் பிணமாக மிதந்தது தொடர்பாக நீடித்து வந்த மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அறுவரில் ஒருவர் அந்தப் படுபாதகச் செயலைப் புரிந்ததை ஒப்புக் கொண்டார்.

சுமார் 2 வாரங்களுக்கு முன்பு கம்போங் ஒன் லோக் பத்தாங் மலாக்கா, ஜாசினில் ஒரு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் இந்தியத் தம்பதியருக்குப் பிறந்த ஆண் சிசு பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் அந்த சிசுவின் பெற்றோர் உட்பட குடும்ப உறுப்பினர் அறுவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது சிசுவின் தந்தையின் சகோதரர், சிசுவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் மனநோயாளி என மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ஜலில் ஹசான் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் இன்னும் அணுக்கமான விசாரணை நடக்கிறது. கைதான மேலும் ஐவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்னும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை.

சிசு கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நீடிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூலை 22ஆம் தேதி ஆண் சிசு காணாமல் போய்விட்டதாக புகார் செய்யப்பட்டிருந்தது. மறுநாள் அந்த சிசுவின் உடல் அதன் பெற்றோர் வசித்த வீட்டின் பின்புறம் இருந்த ஆறு மீட்டர் ஆழம் கொண்ட கிணற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் சிசுவின் பெற்றோர் உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.