காஜாங், ஆக. 4-

வெகுவிரைவில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ள விவேகம் திரைப்படத்தின் அறிமுக பாடலை பாடியுள்ள மலேசியாவில் புகழ்பெற்ற சொல்லிசை மன்னரான யோகிபியுடனான ஒரு மாலைப் பொழுது அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மலேசிய தல அஜித் நற்பணி கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு மலேசிய கலைஞரை அங்கீகரிக்கும் வண்ணம் இந்நிகழ்வு அண்மையில் காஜாங் ஒரியண்டல் கிரிஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு ஆடுகள படத்தில் பாடியதை தொடர்ந்து அவரது இசைப் பயணம் சில காரணங்களால் தடைபட்டது.

6 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு அஜித் நடித்து வெளிவரவுள்ள விவேகம் திரைப்படத்தில் சர்வைவா என்ற பாடலை அவர் பாடியுள்ளார். கேட்பவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளதாகவும் அவ்வரிகளுக்கு உந்து சேர்க்கும் வகையில் அனிருத் அற்புதமாக இசையமைத்துள்ளதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய யோகிபி கூறினார்.

கலைஞர்களுக்கு அவர்கள் தொடர்ந்து சாதனை படைக்க அங்கீகாரம் என்பது மிக முக்கியம். அவ்வகையில் நீண்ட நாளுக்கு தமக்கு மலேசியாவில் இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இத்தகைய நிகழ்வினை ஏற்பாடு செய்த மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்திற்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார்.

அதேவேளை நடிகர்களின் பெயரில் இயங்கும் இயக்கங்கள் போலி விளம்பரத்திற்காக செயல்பாடாது சமுதாய நோக்கத்தில் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றும் இதையே இதர இயக்கங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  இந்நிகழ்வில் காஜாங்கிலுள்ள அஸ்தானா ஆதரவற்றோர் இல்லத்திற்கு இந்நற்பணி மன்றம் பரிசு பொருள்களையும் ரொக்கமும் வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மன்றம் நடிகர் அஜித்தின் பெயரில் பல நற்காரியங்கள செய்து வருவதாக அதன் தலைவர் தேவேந்திரன் கூறினார்.

அதோடு சமுதாய பணியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று நினைக்கும் அஜித் ரசிகர்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.