தோக்கியோ, ஜூன் 12-
மலேசியா அதிவிரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
தற்போதைக்கு இத்திட்டத்தை மேற்கொள்ள முடியாது. இருந்த போதிலும் அதனை தொடர்வதற்கான வாய்ப்புகள் நமக்கு இன்னும் இருக்கின்றன.
மலேசியாவில் எச்எஸ்ஆர் இருக்காது என்று சொல்ல முடியாது. தற்போதைக்கு இத்திட்டத்திற்கு அதிகப்படியான செலவு இருப்பதால் இதை ஒத்தி வைக்க மட்டுமே முடிந்ததாக துன் மகாதீர் கூறினார்.
மலேசியாவுக்கு உண்மையில் ஓர் அதிவிரைவு இரயில் திட்டம் தேவைப்படுகிறது. ஆனால் அதை எதிர்காலத்தில் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்று தோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் என்ற மாநாட்டில் உரையாற்றிய போது பார்ட்டி பெர்சத்துவின் அவைத் தலைவருமான மகாதீர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த எச்எஸ்ஆர் திட்டம் தேவையற்ற ஒன்று. அதனால் சிங்கப்பூருடனான இத்திட்டத்தை மலேசியா ரத்து செய்யும் என்று கடந்த மாதம் 28ஆம் தேதி மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.