பெட்டாலிங்ஜெயா, ஜூன் 27
தனியார் கல்லூரி மாணவரான ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி குறி சுடும் மையத்திலிருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் அத்துப்பாக்கியின் மூலம் 19 வயதுடைய அந்த மாணவர் குளியல் அறையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என சுபாங் ஜெயா ஒசிபிடி துணை கமிஷனர் முகமட் அஸ்லின் சடாரி தெரிவித்தார்.

அந்த மாணவரின் உடலுக்கு அருகே அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் காணப்பட்டதாக முகமட் அஸ்லின் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அந்த மாணவர் துப்பாக்கி குறி சுடும் மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த மாணவனின் சடலம் கண்டு பிடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் அந்த மையத்திலிருந்து அவர் துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த மாணவர் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது தந்தை கூறியதாக ஏசிபி முகமட் அஸ்லின் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.