ஸ்கோப்யே, ஆக. 9-

ஐரோப்பிய சூப்பர் கிண்ண ஆட்டத்தில் கேரட் பேலே அவ்வணியின் முதன்மை விளையாட்டாளராக களமிறக்கப்பட்டதால் வருகின்ற புதிய பருவத்தில் அவ்வணியின் திட்டத்தில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது தெளிவாகின்றது. இனி, அவரை வாங்குவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்ள போவதில்லை என மன்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி ஜோசெ மரின்யோ தெரிவித்தார்.

ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்த ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோசெ மரின்யோ மேற்கண்ட தமது முடிவை தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் கேரட் பேலேவை ரியல் மாட்ரிட் களமிறக்காவிட்டால் அவரை வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜோசெ மரின்யோ இதற்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், அவ்வணிக்கும் அதன் நிர்வாகி ஜினெடின் ஜிடானுக்கும் தேவைப்படும் விளையாட்டாளராக கேரட் பேலே விளங்குகிறார். அவரும் அவ்வணியில் நீடிக்க விரும்புவதால் இனி அவரை வாங்குவது சாத்தியமற்றது என மரின்யோ கூறினார்.

மேலும், ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் விளையாட்டாளர்கள் முடிந்த வரையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதாகவும் அவர்களது ஆட்டம் தமக்கு மனநிறைவை அளிப்பதாகவும் மரின்யோ குறிப்பிட்டார்.