கோலா பிலா, செப்.20-
பகாவ், கோலப்பிலா கெல்பின் தமிழ்ப்பள்ளி ஆசிரியை எம்.தனலெட்சுமி (வயது 26) சாலை விபத்தில் மரணமுற்றச் சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அனைவரையும் பாதித்துள்ளது. அவரது மரணம் குறித்து நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.
ஜாலான் சிரம்பான் 26ஆவது கி.மீட்டரில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.
புரோட்டோன் சாகா பிஎல்எம் ரக காரை இவர் செலுத்திய போது நேர்ந்த விபத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே தனலெட்சுமி மாண்டார். மூன்று வாகனங்கள் இவ்விபத்தில் சிக்கின.
சிரம்பானிலிருந்து கோலப்பிலாவை நோக்கி 2 புரோட்டோன் சாகா பிஎல்எம் கார்களும் எதிர் திசையில் வந்த லோரியும் விபத்தில் சிக்கியதாக கோலப்பிலா மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரிண் டெண்டன் ஹஸ்லா பாச்சொக் கூறினார்.
தனலெட்சுமி ஒரு காரை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து நேர்ந்திருப்பதை முதல் கட்ட விசாரணை காட்டுகிறது. இவருடைய கார் லோரியுடன் மோதிய பிறகு அந்த லோரி வலதுபுறமாகத் தடம் புரண்டு மற்றொரு காரை மோதியிருக்கிறது.
ஓட்டுநர் இருக்கையிலேயே சிக்கிக் கொண்ட தனலெட்சுமி அங்கேயே உயிரிழந்தார். மற்றொரு கார் ஓட்டுநரான உஜங் யாஹ்யா (வயது 48) லோரி ஓட்டுநர் எஸ்.துரைசாமி ‘(வயது 54) காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
மரணமுற்றவரின் உடல் பரிசோதனைக்காக துங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1) கீழ் இந்த விபத்து பற்றி விசாரிக்கப்படுகிறது. விபத்தில் நொறுங்கிய காரின் மேற்கூரையை வெட்டி எடுக்க 15 நிமிடங்கள் ஆனது. பின்னர்தான் தனலெட்சுமியின் உடல் வெளியே மீட்கப்பட்டதாக கோலப்பிலா தீய்டணைப்பு மீட்புத் துறைத் தலைவர் இவா சைபுல் கமுனி தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியரான தனலெட்சுமி, அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். குறிப்பாக மாணவர்களின் மேம்பாட்டிற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வந்தார். அவரது ஆத்மா அமைதி பெறட்டும்.

