கோலாலம்பூர், செப். 23
ஒரு விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தாமல், அது சார்ந்த செய்திகளை நாளிதழ்களில் வெளியிட்டு அவதூற்றை பரப்பக்கூடாது. இந்நிலையில் தமது பெயருக்கு களக்கம் விளைவித்த சீனா நாளிதழிக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென எஸ்பிகேர் குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக நேற்று இண்ஸ்டாகிராம் சமூக தளத்தில் டாக்டர் சத்தியபிரகாஷ் பெயரில் ஒரு போலி கணக்கு திறக்கப்பட்டது. அதில் கேபிஜே மருத்துவமனைக்கு உடனடியாக சிறுநீரகம் தேவைப்படுவதாகவும் அதற்கு 25 லட்சம் வெள்ளி வழங்கவும் தயாராக இருப்பதாகவும் செய்தி பரவியது.
பின்னர் இந்த செய்தி மறுப்பு தெரிவித்திருந்தது கேபிஜே அம்பாங் புத்ரி மருத்துவமனை. இந்த விவகாரத்தின் உண்மை தெரியாமல், ஒரு சீன நாளிதழ், போலி மருத்துவர் என்ற பெயரில் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனால் தாம் மன உலைச்சளுக்கு ஆளானதாக டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத் துறையில் நான் ஈடுபட்டு வருகிறேன். 10க்கும் அதிகமான கிளை மருத்துவமனைகள் எஸ்பிகேர் குழுமத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் 150க்கும் அதிகமானவர்கள் பணிப்புரிகிறார்கள். இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் இது 150 குடும்பங்களை பாதிக்குமென்பதை நினைவில் கொள்ள வேண்டுமென டாக்டர் பிரகாஷ் கூறினார்.
இந்த விவகாரத்தினால் மன உலைச்சல் அதிகமாகினாலும் பல ஆண்டுகாலமாக இத்துறையில் இருப்பதால், இம்மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனபக்குவம் எனக்கு உண்டு . ஆனால் புதிய மருத்துவருக்கு இம்மாதிரியான பிரச்னை எழுந்தால் என்னாவாகும் என்பதே அச்சமாக உள்ளது. இனியும் இதுமாதிரியான நடவடிக்கை தொடராமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக இதில் சம்பந்தப்பட்ட அந்த சீன நாளிதழ்தான் எஸ்பிகேர் குழுமத்தின் மருத்துவமனைகள் குறித்து முழு பக்க செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று உண்மை அறியாமல் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இதனால் தாம் அனைத்து நிலைகளிலும் பிரச்னைகளை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.
இண்ஸ்டாகிராமில் இந்த சிறுநீரகம் தேவை என்ற தகவலுக்காக எனது பெயரில் புதிய கணக்கு திறக்கப்பட்டுள்ளது. அதற்காக எனது முகநூலில் உள்ள நிழல்படத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள். அந்த செய்தியின் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி எண்களும் இப்போதுவரை பயன்பாட்டில்தான் உள்ளது. இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தாம் கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் 2 புகார்களை மேற்கொண்டிருப்பதாகவும் டாக்டர் சத்தியா கூறினார்.
இது குறித்து மலேசிய பல்லூடக குற்றவியல் தடுப்பு துறையிடமும் புகார் செய்யப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டநடவடிக்கைதான் சரியான தேர்வாக இருக்குமென்பதால், வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். எஸ்பிகேர் குழுமம் சார்ந்து இந்த பொய் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் எங்களிடம் பல ஆண்டுகாலமாக சுகாதார சேவையை தொடரும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.