ஷா ஆலாம், அக்.23
ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் இன்று காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருகிலிருந்தபடி சுட்டதில் ஓர் உடற்பயிற்சிக் கூட உரிமையாளரும் அவரது உதவியாளரும் கடுமையாகக் காயமுற்றதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க இருவரும் அந்த சாலை வழியாக காரில் வந்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அப்போது உரிமையாளர் காரோட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரது உதவியாளரான ஓர் இந்தோனேசிய ஆடவர் பயண இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்கள் இந்த சாலை வழியே வந்துக் கொண்டிருந்த போது அவர்களின் பின்புறத்தில் வந்த 4 சக்கர வாகனம் ஒன்று அவர்களை முந்திச் சென்றதையடுத்து அதிலிருந்த ஒருவன் ஓடி ரக காரிலிருந்த அவ்விருவரையும் நோக்கிச் சில முறை துப்பாக்கியால் சுட்டான்.

உடற்பயிற்சிக் கூட உரிமையாளருக்குக் கன்னத்தில் காயம் ஏற்பட்ட வேளையில், அவரது உதவியாளருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் அவரது காரில் 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பஹாருடின் குறிப்பிட்டார்.