சென்னை, அக்.26 –

டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணை முடியாது என முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் சாசன கடமையை பேரவைத் தலைவர் மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ கூற முடியாது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பேரவைத் தலைவரால் நெறி தவறி பிறப்பிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி நீக்கம் தொடர்பாக செம்மலை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாலேயே அவர்கள் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர்களுக்குச் சாதகமானதாகவும் ஒருதலைப்பட்சமாகவும் பேரவைத் தலைவர் தனபால் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது.

தகுதி நீக்கம் செய்ததில் பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் என்பதை 18 பேரும் நிரூபிக்கவில்லை.

எனவே, 18 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் வெளியிட்ட உத்தரவு செல்லும். மேலும், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான இடைக்காலத் தடையும், 18 எம்.எல்.ஏ.-க்களின் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.-க்களுடன் தினகரன் இன்று ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் முடிவு எடுக்கப்படும் என தினகரன் கூறினார்.

இந்நிலையில், அமமுக கொள்கைபரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-வுமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுகவுடன் இணை முடியாது. ஆலோசனை நடத்தி, நாங்கள் முடிவெடுத்த பிறகு எங்கள் தரப்பு ஸ்லீப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள் என்றும் தற்போது, எங்களுடன் 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அமமுக பெரிதா, அதிமுக பெரிதா என்பதை 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரும் மேல்முறையீடு செல்வதைவிடை இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருவது தெரியவந்துள்ளது.