சுபாங் ஜெயா, நவ.12-
சீபில்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைப் பின்பற்றாமல் ஆலயத்தின் இரு தரப்பு நிர்வாகத்தினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மேம்பாட்டு நிறுவனம் விரும்புகிறது என எப்எம்டி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
யூஎஸ்ஜே2இல் உள்ள இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே இடத்தில் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தற்போது ஒரு தரப்பு பின்பற்ற மறுக்கிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன் சிட்டி டெவலப்மன்ட் (One City Development) மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர், யாவ் ஷெங் பங் தெரிவித்தார்.
இதில் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்ய எங்களால் இயன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு விட்டோம். இனி அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்று எப்எம்டியிடம் யாவ் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் ஒன் சிட்டி நிறுவனத்தைத் தவிர சிலாங்கூர் மாநில அரசு மற்றும் தங்களை ஆலயத்தின் நிர்வாகத்தினர் என்று கூறிக் கொள்ளும் கே.செல்லப்பா, எம்.நாகராஜு ஆகியோர் அருகே உள்ள நிலத்தில் புதிய ஆலயத்தை நிர்மாணிக்க வெ.15 லட்சம் வழங்குவதாக ஒன் சிட்டி கூறியதைத் தொடர்ந்து அந்நிலத்தை ஒப்படைக்க இணக்கம் தெரிவித்தனர்.
இதற்கு முன் ஆலயத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தொடர்பில் செல்லப்பா நீதிமன்றத்தில் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தாங்கள்தான் ஆலயத்தை நிர்வகிக்கக்கூடிய சட்டப்பூர்வமான தரப்பினர் என்று செல்லப்பா கூறிய போது நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற நாகராஜு மறுத்து விட்டார்.
இதற்கிடையில், இந்த ஆலயப் பிரச்னைக்கு நன்முறையில் தீர்வு காண தமது நிறுவனம் செலவுகள் ஏதும் கணக்குப் பார்க்கவில்லை என்று யாவ் குறிப்பிட்டார்.
தொடக்கமாக இந்த ஆலயம் யூஎஸ்ஜே 25இல் உள்ள 15,000 அடி கொண்ட ஒரு சிறு நிலத்திற்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால் இதன் புதிய நிர்வாகம் யூஎஸ்ஜே23இல் உள்ள 1 ஏக்கருக்கும் அதிகம் கொண்ட நிலத்திற்கு இடம் மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மானித்தது. இதில் அந்த ஆலயத்தின் நன்மைக்காக ஒன் சிட்டி நிறுவனம் வழங்கக்கூடிய வெ.10 லட்சத்திற்கும் மேலான தொகைக்கு தனது உரிமையை விட்டுக் கொடுக்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அனைத்தையும் முறையாகச் செய்து விட்டதோடு அனைத்துத் தரப்பினருடனும் உடன்பட்டு விட்டோம். சட்டத்தில் உள்ள அனைத்தையும் பின்பற்றி ஆலயத்தை நிலை நிறுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் சிறப்பாக மேற்கொண்டு விட்டோம் என்று யாவ் மேலும் கூறினார்.