புத்ராஜெயா, நவ.13
வெள்ளத்தை எதிர்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக அடுத்தாண்டு தொடங்கி எஸ்பிஎம் துணைப் பாடத் தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய தேர்வு வாரியத்துடன் விவாதிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் தற்போது நவம்பரில் நடத்தப்படும் இத்தேர்வுகள் இனி செப்டம்பர் இறுதியிலிருந்து அக்டோபர் மாதத் தொடக்கம் வரை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
அந்தத் தேர்வுக்கானப் பாடங்களில் அரேபிய மொழி, பஞ்சாபிய மொழி, கடாசான் மொழி, ஈபானிய மொழி, தசாவ்வர் இஸ்லாம், தொழில்கல்வி ஆகியவை அடங்கும். இத்தேர்வுகளை வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே எழுத மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அமைச்சு விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிலும் இந்தப் பரிந்துரை இதற்கு முன் ஏற்பட்ட வெள்ள அனுபவத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, அப்படி வெள்ளம் ஏற்பட்டால் நிரந்தர நடவடிக்கை நடைமுறையை (எஸ்ஒபி) அமைச்சு பின்பற்றி இதர தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இடம் மாற்றும். இதில் எஸ்பிஎம் தேர்வு முழுவதும் எம்மாதிரியான வெள்ளம் அல்லது இதர பேரிடர்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள அமைச்சு தயாராக இருக்கிறது என அவர் கூறினார்.

