கோலாலம்பூர், ஜன.23- 
பங்சார், ஜாலான் தண்டோக் சாலையில் இன்று காலை 7.00 மணியளவில் டாக்சி மோதியதில் அதிரா பத்ரிசேஷா எனும் 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது அண்ணன் அம்ஸார் ஹஸிக் அஜிசுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

புக்கிட் பண்டாராயா தேசியப்பள்ளி மாணவியான அதிராவுக்கு தலை, உடல், கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார் என கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஏசிபி ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.

அவரது அண்ணன் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், டாக்சி ஓட்டுநருக்கு ஏதும் ஏற்படவில்லை.

அதிராவின் உடல் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என ஸுல்கிப்ளி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.