ரவாங் ஏப்ரல் 30-

சுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் எஸ்பி கேர் கிளினிக் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக அதன் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் சுகாதார பிரச்சினையை எதிர் கொள்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பொறுத்து சுகாதாரமும் அமைகின்றது என அவர் தெரிவித்தார். இளமைக் காலத்தில் தொடர்ந்து வேலை செய்யும் தருணத்தில் நோய்கள் பரவுவதை நமது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காக்கின்றது. இருப்பினும் அதற்கான சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதை நாம் தவற விட்டால் மிகப்பெரிய சுகாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என டாக்டர் சத்திய பிரகாஷ் எச்சரித்தார்.

லாரி ஓட்டுனர்கள் உட்பட, வீடு கட்டுபவர்கள் குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எளிதாகிவிடும். நோய் முற்றிய பிறகு அதனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய சவாலை நாம் எதிர் கொள்கிறோம் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

எஸ்பி கேர் கிளினிக் தொடர்ந்து மக்களுக்கு சமுதாய சேவையையும் முன்னெடுத்து வருகின்றது. இலவச மருத்துவ பரிசோதனையின் மூலம் வறுமைக் கோட்டின் கீழுள்ள இந்தியர்கள் பெருமளவில் நன்மை அடைகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

ரவாங், உலு சிலாங்கூர் பகுதியில் மருத்துவச் சேவைக்கு மிகவும் பிரபலம் பெற்ற கிளினிக்குகளில் ஒன்றான எஸ்பி கேர் கிளினிக்கின் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம் அனண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலு சிலாங்கூர் சுங்கை சோவில் அமைந்துள்ள எஸ்பி கேர் கிளினிக் வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். ஆண்டுதோறும் இது போன்ற சிறந்த மருத்துவ நடவடிக்கைகளை எஸ்பி கேர் குழுமம் தம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறது.

ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட எல்லா நோய்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஒரு ஆம்புலன்ஸ் பற்றி முழுமையான விளக்கமும் அதைத் தவிர்த்து நோய்வாய்ப்பட்டவருக்கு உடனடி முதலுதவி வழங்குவது எப்படி என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோங் தெரிவித்தார்.