கோலாலம்பூர் மே 25-

கெராக்கன் கட்சியின் முன்னாள் துணை தலைவரான டத்தோ கோகிலன் பிள்ளை, மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ நல்ல கருப்பன் ஆகியோர் கூடிய விரைவில் மலேசிய இந்திய காங்கிரசின் இணைவார்கள் என அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் அவர்களுக்கு உயரிய பதவி வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

வெள்ளிக்கிழமை இரவு மலேசிய இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பெண்ணே உனக்கு நீயே எனும் கருத்தரங்கின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியில் முதன்மை உறுப்பு கட்சியாக மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்குகின்றது. அதோடு இந்தியர்களை பிரதிநிதிக்கும் இதர கட்சிகளும் தோழமை கட்சிகளாக கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் நோக்கத்தை தாம் கொண்டிருப்பதையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

ஐபிஎப் கட்சியைப் பொருத்தவரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தங்களது கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அதனை கலைத்துவிட்டு மஇகாவோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை நம்மால் முன் வைக்க முடியாது. எப்போதும் போலவே அவர்கள் தங்கள் கட்சி பணிகளை செய்யலாம். அதே நேரத்தில் மஇகாவிலுன் இணைந்து பணியாற்றுவதற்கான செயல் திட்டங்களை நாம் அடையாளம் கண்டு வருகிறோம் என்றார் அவர்.

அதேபோல் மக்கள் சக்தி கட்சியையும் எப்படி இணைப்பது என்ற நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.