கோலாலம்பூர், ஜூன் 4-
மலேசியன் ஏர்லைன்ஸ் எனப்படும் மலேசிய விமான நிறுவனத்தை மூடுவது சிறந்த ஆலோசனையாக இருக்காது என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இஷாம் இஸ்மாயில் கூறினார்.
மாறாக இந்த விமான நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய ஏர்லைன்ஸை மூடுவது தவறான நடவடிக்கையாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். அந்த நிறுவனத்தின் கருத்தோ, பங்குதாரர்கள் அல்லது மலேசிய ஏர்லைன்ஸ் இயக்குனர் வாரிய உறுப்பினர்களின் கருத்து இதுவல்ல என இஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
மலேசியன் ஏர்லைன்ஸிற்கு அதன் இயக்குனர் வாரியத்திற்கு முதலீட்டாளர்கள் உதவுவதை வரவேற்பதாக இஷாம் கூறினார். எந்த ஒரு நிறுவனமோ அல்லது வர்த்தக அமைப்பில் பங்குதாரர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை தாம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் சொன்னார்.
மலேசியா ஏர்லைன்ஸின் தலைமை செயல் அதிகாரி என்ற முறையில் முதலீட்டாளர்களின் பங்கேற்பை குறிப்பாக இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். புதிய கலாச்சாரத்தை அவர்கள் கொண்டு வந்து எதிர்கால சந்தையில் போட்டியிடும் வகையில் மலேசியா ஏர்லைன்ஸிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று இஷாம் கேட்டுக் கொண்டார்.
அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்தின் 75 ஆவது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். விமான நிறுவனத்தை விற்பது மற்றும் முதலீட்டாளர்களை பெறுவது சரி சமமான ஆலோசனையாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார். .
மலேசிய ஏர்லைன்ஸ்ஸை ஒரே நாளில் மூடிவிட முடியாது. இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். நூறு விழுக்காடு பங்குகளை நாம் முதலீட்டாளர்களுக்கு விற்க முடியுமா? இது மலேசிய ஏர்லைன்ஸை மூடுவதற்கு நிகராக அமைந்துவிடும் என இஷாம் கூறினார்.
மலேசியா ஏர்லைன்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நிதி, ஆற்றல், அனுபவம் ஆகியவை தேவைப்படுகிறது. இதற்கு .முதலீட்டாளர்கள் உதவ வேண்டுமென தாம் விரும்புவதாக இஸாம் தெரிவித்தார்.