கோலாலம்பூர் அக். 8-
நாடக கலைக்கு அழிவே கிடையாது. நல்ல ரசிகர்கள் இருக்கும் வரை சினிமாவுக்கு கலைஞர்களை உருவாக்கும் தலமாக நாடகக்கலை தொடர்ந்து நிலைத்திருக்கும் என எழுத்தாளரும் நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்தார்.

மலேசியாவிற்கும் தமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாடகக் கலையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் மலேசியர்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தீபாவளி சரவெடி எனும் நாடகத்தை நடத்த தான் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ப்ரோ எஸ்ஸட் கிரேஷன்ஸ் சாயி ஹெர்பல் பியூட்டி இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் தீபாவளி காமெடி சரவெடி எனும் மேடை நாடகம் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது இது குறித்த மேல் விவரங்களை இந்நிகழ்ச்சியில் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜெயராஜ் துரைசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

பிரிக்பீல்ட்ஸ் நுண்கலை கோவில் உட்பட முதலில் ஐந்து இடங்களில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது. அதோடு தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற திட்டம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் மேடை நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் அடுத்த முறை மலேசிய கலைஞர்களை பெருமளவில் கொண்டு நாடகத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஒய்ஜி மகேந்திரன் கூறினார்.

மலேசியாவிலும் தரமான நாடக கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் திறமையை வெளி உலகிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஒய்ஜி மகேந்திரன் ஈடுபடுவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தொழிலதிபரும் சமூக சேவையாளர் ஜீவி நாயர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இந்த நாடகம் மலேசியர்கள் நிச்சயம் கவரும். குறிப்பாக காலஞ்சென்ற மகாத்மா காந்தி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் ஆவிகளை மையப்படுத்திய ஒரு மேடை நாடகமாக இது இருக்கும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.