சைபர்ஜெயா, பிப். 10-
மத்திய கிழக்கு சமாதான திட்டத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகவேண்டும் என மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
”அமெரிக்கர்களுக்கு எதிராக நான் பேசவில்லை அதிபர் ட்ரம்ப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன்” என மகாதீர் குறிப்பிட்டார்.
அதோடு ”அமெரிக்கர்கள் மிகவும் நல்லவர்கள், ஆனால் அதிபர் டிரம்ப் அவர்களைப் போன்றவர் அல்ல என்பதை நான் காண்கிறேன்.” ”இந்நிலையில் அமெரிக்காவை காப்பாற்றுவதற்காகவே நான் அதிபர் ட்ரம்ப் பதவி விலகும்படி கேட்டுக்கொண்டேன்” என இன்று சைபர் ஜெயாவில் பிரஞ்சு வணிகச் சமூகத்துடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன திற்கான சமாதானத் திட்டத்தை “நூற்றாண்டின் ஒப்பந்தம்” என்ற டிரம்ப் வர்ணித்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என்பதால் அவரைப் பதவி விலகச் சொன்னேன் அவரின் கருத்து மத்திய கிழக்கில் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும் என்பதைக் காரணம் காட்டி பதவி விலகக் கூறியதாக மகாதீர் விளக்கமளித்தார்.
இதன் தொடர்பில் மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் மகாதீர் இன் கருத்துக்கு மறுமொழி அளித்துத் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தது. அது குறித்துக் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

