ராகாவின் காலை அறிவிப்பாளர்களான, சுரேஷ் மற்றும் அஹிலா இருவரும் கலக்கல் காலை இரட்டையராக தங்களது 10-ஆம் ஆண்டு நட்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர்கள் இருவரும் தங்களுடைய அழகான நட்புப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொண்டனர்.

நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் நண்பர்களாக இருக்கிறீர்கள்?

அஹிலா: கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் சிறந்த நண்பர்கள். முக்கியமாக, ராகா அறிவிப்பாளர்களாகப் பணியைத் தொடங்கியதிலிருந்து நண்பர்கள்.

சுரேஷ்: 10 ஆண்டுகள்.

உங்களின் நட்பை எவ்வாறு விவரிப்பீர்கள்?

அஹிலா: நான் அவருடைய பெற்றோருடன் நெருக்கமாக இருப்பதால் எங்களின் நட்பை ஒரு குடும்பத்திற்கு ஈடாக கூறுவேன்.

சுரேஷ்: சிறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்களாகிய எங்களின் நட்பு மிக எளிதானது. நாங்கள் பொதுவாக தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்வோம்.

நண்பர்களாக உங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

அஹிலா: நாங்கள் அறிவிப்பாளர்களாக பணியாற்றத் தொடங்கியபோது முதல் முறையாக ராகாவில் சந்தித்தோம். ஒரு சாதாரண வதந்திகளுடன் (gossip) தொடங்கிய எங்களின் நட்பு தற்பொழுது மிக அழகாகவும் ஆழமாகவும் வளர்ந்து, என்னை நன்கு அறிந்த என் உயிர்த் தோழனாக அவர் மாறினார்.

சுரேஷ்: முதல் நாள் வேலைக்கு சென்றபோது கார் நிறுத்துமிடத்தில் நான் அஹிலாவைச் சந்திக்க, நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். பின்னர், நான் அஹிலாவை மீண்டும் ராகா அலுவலகத்தில் சந்தித்தேன். அந்நேரத்தில் அவரை ஓர் அந்நியராக மட்டுமே உணர்ந்தேன். நாங்கள் இருவரும் மிக்ஸ் (MIX) மற்றும் ஹிட்ஸ் (HITZ) வானொலியில் எங்களின் அடிப்படை பயிற்சியில் கலந்துகொண்டபோதுதான் எங்களின் நட்பு மலரத் தொடங்கியது.\

உங்களில் ஒருவருக்கு திருமணமான பிறகு நட்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?

அஹிலா: நாங்கள் இருவரும் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினோம், எனவே இயற்கையாகவே நாங்கள் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் குறைந்தது – குறிப்பாக சுரேஷ் திருமணம் செய்து கொண்டதால் அல்ல. இருப்பினும், நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலையில் சந்திப்பதால், நாங்கள் ஒன்றாக இருப்பதோடு நல்ல நேரங்களை செலவிடும் வாய்ப்பும் கிட்டுகிறது.

சுரேஷ்: இல்லை, எங்களின் நட்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்று நான் கூறுவேன்.

நண்பர்களாக நீங்கள் பகிர்ந்துக் கொண்ட மறக்கமுடியாத சில தருணங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

அஹிலா: நாங்கள் பகிர்ந்துக் கொண்ட ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றதோடு அர்த்தமுள்ளது என்று நான் கூறுவேன். நாங்கள் உடற்பயிற்சி கூடத்தில் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டது, எங்களின் நண்பரின் அடுக்குமாடி (apartment) குடியிருப்புக்கு அடிக்கடி சென்று அங்குள்ள பால்கனியில் (balcony) நீண்ட நேரம் உரையாடுவது என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அத்தருணங்கள் யாவும் மிகச் சிறந்தவை மற்றும் மறக்க முடியாதவை.

சுரேஷ்: எனது முதல் நாள் ஒலிபரப்பில், அஹிலா அந்நாளில் வேலை செய்யவிட்டாலும் ஸ்டுடியோவில் என் அருகில் இருந்தார். திரைப்படங்களைப் பார்த்தபோது, ‘சீரியல் பேய்’ நாடகத்தில் நடித்தபோது, என் கார் காணாமல் போனபோது, ​​அஹிலா ஒரு கார் விபத்தை சந்தித்தபோது, மற்றும் நாங்கள் கலக்கல் காலை ​​அறிவிப்பாளர்களாக ஒன்றிணைந்தவரை பல மறக்கமுடியாத சுவாரஸ்சியமான தருணங்களை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம்.

ஒருவருக்கொருவர் உயிர்த் தோழர்களாக இருப்பதற்கு நீங்கள் எந்த விஷயத்திற்காக மிகவும் நன்றி தெரிவிப்பீர்கள்?

அஹிலா: எனது ரகசியத்தை தனது சொந்த ரகசியமாக காக்கும் ஒரு நண்பர் கிடைத்தது எனக்கு ஒரு வரம் போன்றது, இறைவனின் ஆசீர்வாதமும் கூட. அதனுடன் அவர் என்னை தவறாக மதிப்பிடாததற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

சுரேஷ்: எங்களின் மகிழ்ச்சியையும் பிரச்சினைகளையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ள முடிவதால் நான் மகிழ்ச்சியடைவதோடு நன்றி கூறகிறேன்.

உங்களின் சிறந்த பண்புகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

அஹிலா: நான் நேரந்தவறான்மையான நபர், எப்போதும் விதிமுறைகளையும் விதிகளையும் மிகவும் கண்டிப்பாக பின்பற்ற முயற்சிப்பவர், மறுபுறம் சுரேஷ் ஒரு கவலையற்ற நபர். எங்கள் இருவரின் பண்புகள் ஒரு கலவையாக உள்ளதால், அஃது எங்களின் நட்பையும் பிணைப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது.

சுரேஷ்: நான் ஒரு விளையாட்டுக் குணம் கொண்ட நபர். அஹிலாவோ கண்டிப்பானவர்.

உங்கள் இருவருக்கும் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளதா?

அஹிலா: எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி, எங்களின் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள நாங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் இருவரும் உணவு விரும்பி என்பதால், எங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிடுவதற்காக வெகுதூரம் பயணம் செல்லவும் தயங்கமாட்டோம்.

சுரேஷ்: எங்கள் உணவு சுவையைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்று நான் கூறுவேன். எங்கள் கருத்துக்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் அதனை ஆணித்தரமாக எடுத்துரைப்போம், எவ்வகையிலும் பின்வாங்கமாட்டோம்.

எதிர் பாலினத்தைச் சேர்ந்தவரை உயிர்த் தோழராக கொண்டுருப்பதில் உங்கள் கருத்து என்ன, மேலும், இதன் காரணமாக உங்கள் நட்பில் ஏதேனும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

அஹிலா: எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நண்பரைப் பெறுவது என்பது ஆசீர்வாதம் என்று நான் கூறுவேன். ஏனெனில் அவர்/அவள் விஷயங்களை மற்றொரு கோணத்தில் மதிப்பீடு செய்ய உதவுவர். ஒரு ஆண் நண்பரை எனது சிறந்த நண்பராக வைத்திருப்பதில் நான் எந்த சவாலையும் சந்தித்ததில்லை. ஏனெனில் மக்களின் கருத்துக்கள் என்னைப் பாதிக்கவிடாமல் தவிர்ததாக இருக்களாம்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது என்று சிலர் நினைக்கும் போது, ​​என்னைப் போன்ற ஒரு அர்த்தமுள்ள உறவை அவர்கள் அனுபவிக்கவில்லை என்று கூறி நான் என்னை உற்சாகப்படுத்திக் கொள்வேன். எனவே, சுரேஷுடனான எனது நட்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் அவருடனான எனது புனிதமான நட்பைப் புரிந்துகொண்டு எங்களை ஆசீர்வதிப்பது மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கிறேன். எங்கள் இருவரின் குடும்பங்களும் எங்கள் நட்பை புரிந்துக் கொண்டு ஆசீர்வதித்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திருமணத்திற்குப் பிறகும் ஒரு ஆணும் பெண்ணும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்பதை நிரூபித்த மற்றும் எங்களின் நட்பை புரிந்துக் கொண்ட சுரேஷின் மனைவி, திருமதி குணாவிற்கு இவ்வேளையில் நன்றி மலர்களை நல்க விரும்புகிறேன்.

சுரேஷ்: அவர்களைப் புரிந்துகொள்ள உதவுகையில் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த நண்பரைக் கொண்டிருப்பதில் எந்தவொரு பிரச்சனையுமில்லை என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் இருப்பதால் அனைவருக்கும் எதிர் பாலின நண்பர் இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன்!

ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 6 மணி முதல் 10 மணி வரை சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் இணைய மறவாதீர்கள் அல்லது SYOK செயலியின் வழியாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.