Home மலேசியா கல்வி பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் 3 விருதுகள் வென்று மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் சாதனை

பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் 3 விருதுகள் வென்று மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் சாதனை

427

ஈப்போ, திசம்பர் 19:-

பேரா, வட கிந்தா மாவட்டம், மகிழம்பூ தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் நடைப்பெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் [Malaysia GPM Sustainability Awards – School & STEM Curriculum 2020] மூன்று விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர் இப்போட்டியில் பங்கெடுத்து தங்களின் சிறப்பான படைப்புகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.

சஸ்னெட் [SustNET] எனப்படும் தனியார் நிறுவனம் நடத்திய இப்போட்டியில் பேரா மாநில அளவில் 25 பள்ளிக்கூடங்கள் பங்கெடுத்தன. அதில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மூன்று பிரிவுகளில் [Innovator Eco Brick, 5R Herbal Garden Without Waste மற்றும் Solar Energy Light (SEL)] வெற்றிப் பெற்று விருதுகளை வென்றுள்ளது. 

கடந்த 30.11.2020 நடைபெற்ற இப்போட்டிக்கான மதிப்பபீடு கூகிள் தொடர்பு வழித்தடத்தில் இயங்கலை வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மாரியம்மாள் சூரிநாராயணன் அவர்களின் வழிக்காட்டுதலோடு ஆசிரியர்கள் குமரன் கோபால், சிவா சுந்தராஜூ, திருமதி மலர்விழி லெட்சுமணன், திருமதி கோமளா துரைசாமி மற்றும் திருமதி கஸ்தூரி வரதராஜன் ஆகியோர் இப்போட்டியில் பங்கெடுத்து தங்களின் படைப்புகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றனர்.

இயற்கையை நேசிப்போம் என்ற கருப்பொருளோடு மகிழம்பூ தமிழ்ப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நெகிழிப் பைகளின் பயன்பாடு இல்லாத பள்ளியாக உருமாற்றம் செய்யும் பொருட்டு முதலாவது காலடி எடுத்து வைத்து வெற்றியும் கண்டுள்ளது.

இவ்வெற்றியோடு நின்றுவிடாமல் இதனையே ஒரு நல்ல தொடக்கமாகக் கொண்டு பள்ளியெங்கும் பசுமைத் திட்டத்தை வளர்த்து பசுமையை நேசிக்கும் மற்றும் பாதுகாக்கும் மாணவர்களை உருவாக்குவதில் முன்னோடி பள்ளியாகவும் விளங்க இருப்பதாகவும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறியுள்ளார்.

– நன்றி : புறவம்