மும்பை:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை, கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. அதையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் பலவித உருவங்களில் விநாயகர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பண்டிகையின் இறுதி நிகழ்ச்சியாக பெரிய மற்றும் சிறிய அளவிலான விநாயகர் உருவ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி மராட்டிய மாநிலத்தில் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து வருகின்றனர். இந்த கோலாகலத்துக்கு இடையே சிலர் உயிரிழந்துள்ளனர். அவுரங்காபாத் மாவட்டம் சிவனை ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அந்த ஏரியில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். இதேபோல், புனேவில் 4 பேரும், நாசிக் மற்றும் ஜல்காவில் 2 பேரும், பீட் மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும், அகமதாபாத், சதாரா, பர்பானி ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒருவர் பலியாகினர்.

லால்பாச்சா ராஜா என்ற பெயரில் நிறுவப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை, லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று அச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது, ஏராளமானோர் கலந்து கொண்டனர். மீனவர்களின் பாரம்பரிய கோலி நடனம் ஆடியபடி சென்றனர். அது பெரிய சிலை என்பதால், அரபிக்கடலில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வரும்போது, பக்தர்களின் ’கணபதி பாப்பா மோரியா’ என்ற கோஷங்கள் விண்ணை பிளந்தன. மேலும் பக்தர்கள் உணர்ச்சி வசமாக ஆடிய படியும், பாடிய படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஜூஹு பீச், பவாய் ஏரி மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் என மாநிலம் முழுவதும் சுமார் 7,000 சிலைகள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 33,000 சிலைகள் கடல் மற்றும் ஏரி, ஆறு, குளங்களில் கரைக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.