ஜெருசலம், சனவரி 2:-

இஸ்ரேல் நாட்டில் ஃபைசர் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு அடுத்த நாளே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் மற்ற உலக நாடுகளைவிட மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லட்சம் மக்களுக்கும் அதிகமானோருக்கு ஃபைசர் நிறுவன தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது மொத்த இஸ்ரேல் மக்கள்தொகையின் 12 % என கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுமார் 240 பேர்களுக்கு அடுத்த நாளில் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 8 முதல் 10 நாட்களுக்குப் பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், பின்னர் அது 50 %க்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் டோஸ் எடுத்துக்கொண்டதன் 21 ஆம் நாளில் 2-வது டோஸ் எடுத்த ஒரு வாரத்திற்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி 95 விழுக்காட்டை எட்டும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ் ஒருவர் எடுத்துக்கொண்டாலும், கோவிட்-19 பாதிப்புக்கு 5 % வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. தற்போது இஸ்ரேலில் 240 பேர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தற்போது 10 இலட்சம் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒவ்வாமை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாகத் தகவல் வெளியானது.

குறைவானவர்களே தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் மருத்துவமனையை நாடியுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.