கோலாலம்பூர், ஜன. 13-
தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியீடு கண்டது.
தமிழகத்தில் அதிகாலை காட்சியில் விஜய் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு மாஸ்டர் திரைப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அந்தக் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.
இந்நிலையில் மலேசியா உட்படப் பல நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படவில்லை என இத்திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையைக் கொண்டிருக்கும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் அநேகனிடம் கூறினார்.
கடந்த ஆண்டுச் சித்திரை புத்தாண்டிற்கு வெளிவரவிருந்த இந்த மாஸ்டர் திரைப்படம் கோவிட் 19 கிருமித் தொற்றுக் காரணமாகத் தள்ளிப்போனது. தற்போது 50 விழுக்காடு மக்களுக்குத் திரையரங்கில் அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் இந்தியாவில் இத்திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
மாஸ்டர் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்ப்பதற்குத் தாம் காத்திருப்பதாகவும் டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளிவருவதற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகலாம் என இத்திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கும் லோட்டஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தான்ஶ்ரீ துரைசிங்கம் கூறினார்.
அதற்கு ஒரு மாத காலம் ஆகும். அதற்கு மேல் போகவும் வாய்ப்புள்ளது என்றார் துரைச்சிங்கம்.
மலேசிய விஜய் ரசிகர்கள் திரையரங்கில் மாஸ்டர் திரைப்படத்தைக் காண முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.