சென்னை | மார்ச் 10

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை சுமூகமாக நடத்தியுள்ளது. அடுத்ததாக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள் என தற்போதுவரை 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 174 தொகுதிகள் திமுக நேரடியாக களம்காண உள்ளது. கூட்டணியில் பார்வர்ட் பிளாக் அல்லது வேறு கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடும் தொகுதியில் ஒரு எண்ணிக்கை குறையும். கூட்டணி கட்சியினர் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விவரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளது.

திமுகவில் தங்களுக்கு தொகுதி ஒதுக்காததால் அதிருப்தியில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து நாளை சென்னையில் நடைபெறும் அவசர செயற்குழுவில் முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.

நன்றி : நியூஸ் 18 தமிழ்