ஈப்போ | ஏப்ரல் 25:-
தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணைந்த தமிழர் அமைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்து வழி நடத்திய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரனுக்கும் பத்துமலையில் மாபெரும் தமிழ்ப்புத்தாண்டு விழா நடத்தப்படும் என அறிவித்த மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் மதிப்புமிகு தான் ஶ்ரீ டத்தோ நடராஜாவுக்கும் தங்களின் உளமார்ந்த நன்றியினை தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தைத்திங்கள் முதள் நாளே தமிழ் இனத்தின் புத்தாண்டு என வலியுறுத்தி கடந்த 11-4-2021 ஆம் நாள் பத்துமலைத் திருத்தலத்தில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய எழுச்சி மாநாட்டின் தீர்மானங்களுக்கு தான் ஶ்ரீ நடராஜாவின் இந்த முடிவு வலு சேர்த்துள்ளது என அவ்வமைப்புகள் தெரிவிப்பதாக பேரா தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கத் தலைவர் புகனேசுவரன் தெரிவித்தார்.
இனத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு அறிந்து தான் ஶ்ரீ நடராஜா எடுத்துள்ள இந்த முடிவுக்கு தமிழ் அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்ததாக மலேசிய கிறித்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தலைவர் ஆ.கி. டேவிட் கூறினார்.
மேலும், இரண்டே வாரத்திற்குள் தேசிய நிலையில் அம்மாட்டின் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் 178 அமைப்புகளின் ஒத்துழைப்போடு அவைகளை ஒருங்கிணைத்து வழிநடத்தியது மட்டும் இல்லாமல் அந்தத் தீர்மானங்களை அரசுக்குத் தெரிவிக்கப் பெரும் முயற்சியை எடுத்த பெ.இராஜேந்திரனுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவிப்பதாக தமிழ் முஸ்லிம் பாரம்பரிய, கலாச்சார, மொழி மேம்பாட்டுச் சங்கப் பொறுப்பாளர்கள் அ.மு. நௌஃபலும் ஹாஜி பஷீரும் குறிப்பிட்டனர்.
பல சமயங்களைக் கடந்து தமிழ் எனும் மையப் புள்ளியின் இணையும் அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரே குரலாக ஒலிக்கச் செய்தமைக்கும் அவ்வமைப்புகள் நன்றியினைப் புலப்படுத்திக் கொண்டன.