பெஸ்தாரி ஜெயா | மே 4:-

கடந்த வெள்ளிக்கிழமை இங்குள்ள சுங்கை ரம்பை ஆற்றுக்கு அருகே மலேசியப் பெணமணி என நம்பப்படுபவரின் சடலம் அரை நிர்வாணமாகக் கண்டெடுக்கப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் ரம்லி காசா தெரிவித்தார்.

இரவு 7.30 மணி அளவில் பொது மக்கள் வழங்கியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண்மணி இறந்த நிலையில் கிடந்ததாக அவர் தெரிவித்தார்.

மேல் விசாரணையில் அடையாளம் அறியப்படாத அந்தப் பெண்மணி, ஜாலான் ரவாங்கிற்கு அருகில் உள்ள செம்பனைத் தோட்டத்தினுள் இருக்கும் சுங்கை ரம்பை ஆற்றோரத்தில் மிதந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அப்பெண்மணி சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த உடற்கூறாய்வில் அவர் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருப்பதாகவும் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல்துறையிம் குற்றப் பிரிவு தலைவர் ஏஎஸ்பி முகம்மட் சுஃபியான் ஆமினை 012-6149580 எனும் எண்களிலோ அல்லது அருகில் உள்ளக் காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு சுப்ரிடெண்டண்ட் ரம்லி காசா கேட்டுக் கொண்டுள்ளார்.