கோலாலம்பூர், ஜூல 4-
அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் சிலம்பம், கபடி இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மனித வள அமைச்சர் வ.சிவகுமாருக்கு கோலாலம்பூர் வெற்றி சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் பி. எஸ்.பிள்ளை பாராட்டு தெரிவித்தார்.
சுக்மா போட்டியில் சிலம்பம், கபடி இணைவதற்குக் கடந்த 9 ஆண்டுகளாகத் தாங்கள் போராடி வந்ததை பி.எஸ்.பிள்ளை சுட்டிக் காட்டினார்.
இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இளைஞர் , விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோவுடன் பேச்சு நடத்தி இதனை செயல்படுத்தியுள்ளார் அமைச்சர் சிவகுமார்.
“இவ்வேளையில் ஹன்னா இயோவுக்கும் சிவகுமாருக்கும் வெற்றி சிலம்ப கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.