கோலாலம்பூர், ஜூலை 4-
தங்களை மோசடி செய்து விட்டதாகத் தனக்கு எதிராக புகார் செய்த 10 பேரில் ஒருவர் தனது புகாரை மீட்டுக் கொண்டதாக டத்தோ முருகன் என்ற வர்த்தகர் தெரிவித்தார்.
தனக்கு அறிமுகமான நண்பர் வழி சுமார் 13 பேர் கூட்டாகச் சேர்ந்து கூட்டு கட்டியதாகவும், 2019ஆம் ஆண்டு தொடங்கி இந்த நடவடிக்கையில் முருகன் பங்கேற்று வந்ததாக அறியப்படுகிறது.
இதில் பங்கேற்றவர்களில் சிலர் பணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து இந்த கூட்டு நடவடிக்கை கடந்த 6 மாதங்களாக சுணக்கம் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாதம் 20,000 வெள்ளியை உட்படுத்திய கூட்டு இது.
தங்களுக்குச் சேர வேண்டிய கூட்டுப் பணம் கிடைக்காததால் முருகன்தான் இதற்குப் பொறுப்பு என்றும் அவர் தங்களை மோசடி செய்து விட்டதாகவும் கூறி 10 பேர் இவருக்கு எதிராக போலீசில் புகார் செய்தனர்.
முதலீட்டு மோசடியில் முருகன் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி இதர சிலருடன் சேர்ந்து போலீசில் புகார் செய்யும்படியும் இப்படி செய்தால்தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்றும் ஆடவர் ஒருவர் வற்புறுத்தியதன் பேரில் முருகனுக்கு எதிராகத் தான் போலீசில் புகார் செய்ததாக சம்பந்தப்பட்ட நபர் நேற்று செய்த போலீஸ் புகாரில் குறிப்பிட்டார்.
நீண்ட யோசனைக்குப் பின்னர் முருகன் தங்களை ஏமாற்றவில்லை என்பதை உணர்ந்து அவருக்கு எதிராகத் தான் செய்த புகாரை மீட்டுக் கொண்டதாகவும் அந்த ஆடவர் கூறினார்.
இதனிடையே, தனக்கு எதிராகச் செய்யப்பட்ட புகாரை மீட்டுக் கொள்ளும்படி இதர 9 பேருக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வார கால அவகாசத்தைத் தான் வழங்கவிருப்பதாக இங்குள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முருகன் தெரிவித்தார்.
அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் இவர்கள் அனைவரின் மீதும் வழக்குத் தொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
