கோலாலம்பூர், நவ.4-
அரசாங்கத்தில் பதவி வகித்த காலத்திலும் சரி தற்போது எந்தவொரு பதவியும் வகிக்காத காலத்திலும் சரி இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகள்
மஇகாவிற்கு வழங்கி வரும் ஆதரவு எந்த விதத்திலும் குறையவில்லை என்று
மஇகா தேசிய துனைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இவர்களின் செயல்பாடுகள் கட்சிக்குத் தனி உத்வேகத்தைத் தருகிறது .கட்சி தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்கு நம்பிக்கையைத் தருகிறது என்றார் அவர்.
” இந்த நான்கு பிரிவுகளின் ஆதரவு கட்சி வலுவுடன் செயல்படுவதற்கு துணை புரிகிறது ” என்று தலைநகரில் மஇகா இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் மாநாடுகளை ஏக காலத்தில் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் சகோதரரின் அகால மறைவால் மிக விமரிசையாக நடைபெற வேண்டிய மாநாடுகளை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எளிமையாக நடத்தும்படி தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
” டான்ஸ்ரீ விக்னனேஸ்வரன் அமரர் துன் சாமிவேலு காலத்தில் இருந்து கட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.சகோதரரின் மறைவால் துயருற்றிருக்கும் இவருக்கும் இவரின் குடும்பத்தாருக்கும் இவ்வேளையில்
மஇகா சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.