பெட்டாலிங் ஜெயா, நவ.18-
அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல் 3ஆவது எல்.ஆர்.டி. திட்டத்தில் 5 புதிய நிலையங்களை நிர்மாணிக்கும் பரிந்துரையை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிராசாரானா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரிட்ஸா அப்துல் சாலே வலியுறுத்தினார்.
இதற்கான 470 கோடி வெள்ளி ஒதுக்கீடு சில சொகுசு ஹோட்டல்களுக்கான நிர்மாணிப்பு செலவுகளுக்கு ஈடாக இருப்பதால் அதுபற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய போது ரிட்ஸா குறிப்பிட்டார்.
முன்னதாகக் கடந்த 2018ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பண்டார் உத்தாமாவிலிருந்து கிள்ளான் வரையிலான 37 கி.மீட்டர் தூரம் கொண்ட 5 நிலையங்களுக்கான நிர்மாணிப்புப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இது பண்டார் உத்தாமாவிலுள்ள சுங்கை பூலோ-காஜாங் எம்.ஆர்.டி.யையும் கிளானா ஜெயா எல்.ஆர்.டி. பாதையிலுள்ள கிளேன்மேரி நிலையத்தையும் இணைக்கிறது.
இந்த ஒதுக்கீட்டுத் தொகை எல்.ஆர்.டி. நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மட்டுமின்றி 3 அடுக்கு இரயில் பெட்டிகளை வாங்க, டிப்போக்களை மேம்படுத்துதல், பொறியியலாளர்களுக்கானச் செலவுகள், திட்ட நிர்வாகம், வழக்கறிஞருக்கானக் கட்டணம் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார்.
-எஃப்.எம்.டி.