விகடகவி மகேன், ராகா அறிவிப்பாளருடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.
1. உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
2004ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோவின் ரியாலிட்டி நடனப் போட்டியான ‘ஆட்டம் 100 வகை’-இன் முதல் பகுதி நேர தொகுப்பாளராக ஆவதற்கு முன்பு நான் 10 ஆண்டுகளாக இயந்திர பொறியியலாளராகப் பணிபுரிந்தேன். 2011-இல், நான் எனது முழுநேர நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் பயண நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன்.
2. வானொலி அறிவிப்பாளராகுவதற்கான பின்னணியில் உங்களின் உத்வேகம் என்ன?
2014 முதல் வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றதன் மூலம் தொடர்ந்தேன். பயண நிகழ்ச்சியில் பணி புரிந்த காரணமாக நான் அப்போது பெற்ற வாய்ப்பை நிராகரித்து விட்டேன். வெள்ளிக்கிழமைகளில் விருந்தினர் அறிவிப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு பேசுவதற்கான ஆர்வத்தை எனக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு ‘ஹைப்பர் மாலை’ அறிவிப்பாளராகப் பணிபுரிந்தேன். ஜனவரி 2024 முதல் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரான உதயாவுடன் இணைந்து ‘கலக்கல் காலை’ அறிவிப்பாளராக வானொலியில் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.
3. உங்களின் கலக்கல் காலை அங்கத்தில் சில சிறப்பம்சங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அறிவிப்பாளர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தும் ‘ராஜா-வா ராணி-யா’ என்ற பிரிவு, இரசிகர்களுக்குக் கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கும் தகவல் பிரிவான ‘கூகுள் கூகுள்’, நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தினசரி விவாதத் தலைப்புகள் உட்பட கலக்கல் காலை-இன் அனைத்துப் பிரிவுகளும் மிகவும் சுவாரஸ்யமானவை மற்றும் என் இதயத்திற்கு நெருக்கமானவை. ‘ராஜா-வா ராணி-யா’ என்ற பிரிவில் ஓர் அறிவிப்பாளர் ‘ஆண்’ பக்கமும் மற்றவர் ‘பெண்’ பக்கமும் இருப்பார். குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற அறிவிப்பாளர் ஒவ்வொரு மாத இறுதியில் தண்டிக்கப்படுவார்.
4. உங்களின் இணை அறிவிப்பாளரான உதயாவுடன் இணைந்து கலக்கல் காலையைத் தொகுத்து வழங்குவதில் எவ்வளவு உற்சாகமாக உணர்கிறீர்கள்?
நான் மிகவும் போற்றும் அனுபவமும் அறிவும் மிக்க மூத்த அறிவிப்பாளர், உதயா. உதயாவுடன் இணை அறிவிப்பாளர் பணியை ஏற்க முதலில் எனக்கு சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் குரல் பண்பேற்றம் மற்றும் தொனியில் கவனம் செலுத்துதல், அறிவிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் என பல அறிவிப்புக் கூறுகளை வலுப்படுத்த ஒரு சிறந்த வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். இப்போது எங்களுக்கு இடையே உள்ளச் சகோதரத்துவத்தை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
5. நடிகர், பாடகர் மற்றும் தொகுப்பாளராகப் பல அவதாரங்களைக் கடந்து வானொலி அறிவிப்பாளராக மாறிய அனுபவம் எவ்வாறு உள்ளது?
ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகக் கலைத் துறையில் தொடங்கிய என் பயணம் முதல் உற்பத்தித் துறை வரை நான் பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டுள்ளேன். எனது அனுபவத்தில், பல்வேறு பாத்திரங்களைச் செவ்வெனக் கையாள நேர நிர்வாகம் மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
6. அறிவிப்பாளராக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறு களைந்தீர்கள்?
நான் மொழி என்று கூறுவேன். ஏனென்றால், நான் ஒரு ராப் பாடகர் என்பதால், நேரடியான மற்றும் கடினமான எனது பாடல் வரிகள் போல நான் பேசும் பாணியும் நேரடியானது. இதனால் யார் மனதும் புண்படாமல் பணிவாகக் கருத்துகளைத் தெரிவிக்கும் முயற்சியில் நான் சவால்களை எதிர்கொண்டேன். அதைத் தொடர்ந்து, நான் இன்னும் புலமைப் பெறாத வானொலி நிலையத் தொழில்நுட்பப் பணியான பேனலிங் மற்றும் அதிகாலை 4.00 மணிக்கு நான் எழுந்திருக்கும் நேரம் ஆகியவை ஓர் அறிவிப்பாளராக நான் எதிர்கொள்ளும் சவால்களில் அடங்கும்.
7. அறிவிப்பாளராக ஏதேனும் சுவாரஸ்யமான திட்டத்தில் பணிபுரிகிறீர்களா? ஆம் எனில், அதைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்ள முடியுமா?
உதயா இடம்பெறும் ஓர் இசைக் காணொளியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அது உறுதியான பிறகு அதைச் சார்ந்த தகவல்கள் ரசிகர்களுடன் பகிரப்படும்.
8. வானொலி அறிவிப்பாளராக உங்களின் சமீபத்திய சாதனைகள் அல்லது மைல்கற்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
பொது இடங்களில் ரசிகர்களிடமிருந்து நாங்கள் பெறும் பாராட்டுகளும் அபரிமிதமான ஆசீர்வாதங்களுமே எங்களின் சாதனை என்று கூறுவேன்.
9. வானொலி அறிவிப்பாளராக உங்களின் வெற்றியை எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?
நேயர்களின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமல்லாமல் தினசரி தலைப்புகளைப் பற்றிய பயனுள்ள நுண்ணறிவு மற்றும் அதை வெளிப்படுத்தும் பேச்சுத்திறன் என வானொலி அறிவிப்பாளராக எனது வெற்றியை இவ்வாறே வரையறுக்கிறேன். நேயர்கள் எந்த அச்சமுமின்றி நம்முடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் போது வானொலி அறிவிப்பாளராக வெற்றிப் பெறுகிறோம்.
10. வானொலி அறிவிப்பாளராக உங்களின் குறிப்பிடத்தக்க நினைவகம் அல்லது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தமிழ்ப்பள்ளிக்குச் சென்றுத் தமிழ்ப்பள்ளியில் பயில்வதற்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, எனது ஆஸ்திரேலியா பயணத்தின் போது ராகா மற்றும் எனது அறிவிப்புகளைப் பற்றிய நேயர்களின் நேர்மறையான உரையாடல் என ஒரு வானொலி அறிவிப்பாளராக எனது குறிப்பிடத்தக்க நினைவுகளில் அடங்கும்.
11. வானொலி அறிவிப்பாளராக ஆகச் சில முக்கியக் குணங்கள் யாவை?
ஒழுக்கம், அறிவு, சிறந்த கேட்கும் திறன், நேரம் தவறாமை, குழுப்பணி, நட்பு, வேடிக்கை மற்றும் எளிதாகப் பேசும் திறன் ஆகியவை வானொலி அறிவிப்பாளராக இருப்பதற்குத் தேவையான சில குணங்கள் என்று நான் கருதுகிறேன்.
12. வானொலி அறிவிப்பாளராக விரும்பும் ஒருவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஓர் அறிவுரை என்ன?
ஒரு வானொலி அறிவிப்பாளராக இருப்பது எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் ஒருவர் நல்ல தனிப்பட்ட திறன், பேச்சுத்திறன், அறிவு, பணிவு மற்றும் மிக முக்கியமாகப் பிரபலத்தைப் பொருட்படுத்தாமல் அணுகக்கூடியவராக இருத்தல் அவசியம். எனவே, வானொலி அறிவிப்பாளராகப் பணியைத் தொடர ஒருவர் விரும்பினால் இந்த திறன்களையும் குணங்களையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
13. உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய முன்மாதிரி அல்லது வழிகாட்டியைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக எனது 20களின் தொடக்கத்தில் HITZ.Fm-ஐக் கேட்பேன். ஜேஜே மற்றும் ரூடி ஆகியோர் எனது முதல் முன்மாதிரிகள். அதைத் தொடர்ந்து ராகாவின் உதயா மற்றும் ஆனந்தா ஆகியோரும் எனது முன்மாதிரிகள். ஓர் ஊடக ஆளுமையாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ட்ரெண்ட்செட்டர் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் அவரது வார்த்தைகள் மக்களிடம் நேர்மறையாக எதிரொலிக்கின்றன.
14. வானொலி அறிவிப்பாளராக நீங்கள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்?
வானொலியிலோ அல்லது வேறு எங்கும் என் குரலைக் கேட்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு நேர்மறையான உணர்வைக் கொண்டு வந்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பினேன். கலக்கல் காலை நிகழ்ச்சியின் மூலம் தினமும் காலையில் அவர்களின் ஆற்றலைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்.
15. ரசிகர்களுக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
நண்பர்களே, இந்த வாழ்க்கையில் கவலைப்பட ஒன்றுமில்லை, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள், மற்றவர்களை மகிழ்வித்தும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழ்க்கை என்பது நமக்குள் மகிழ்ச்சியைக் கண்டறிவதே ஆகும்.