கோலாலம்பூர், மே 6-
பிகேஆரின் மத்திய செலவைக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளிலும் அதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவிருப்பதால் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லிக்குப் போட்டியாக தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா போட்டியிட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நூருலின் பெயரை மேற்கண்ட பதவிக்கு ஹாங்துவா ஜெயா பிகேஆர் தலைவர் ஸம்சுல் இஸ்கண்டர் ஆக்கின் முகநூல் வழியாகப் பரிந்துரை செய்துள்ளார்.
தமது பரிந்துரையானது குடும்ப பாரம்பரியமோ அல்லது ஆளுமைப் பண்புகளாலோ அல்லவென்றும் அது எதிர்காலத்தில் கட்சி வலுவாக வளர்ந்து, தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கமே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
கட்சியைத் தோற்றுவித்தவர்களோடு தற்போதைய தலைமுறையினர் கொண்டுள்ள உறவிற்கு ஒரு பாலமாக இருப்பதோடு நூருல் நவீனத்துவத்தை ஏற்று கட்சியின் கொள்கைக்கு வழுவாமல் எதிர்கால மேம்பாட்டுக்கு அயராது உழைக்கக் கூடியவர் என்றும் ஸம்சுல் இஸ்கண்டார் குறிப்பிட்டார்.