கோலாலம்பூர், மே 7-நூருல் இஸா தலைமைத்துவ சீர்திருத்தத்தின் சின்னம் மட்டுமல்ல.அவர் பல முக்கிய மேடைகளில் மக்களின் குரலாக ஒலித்தவர் என்று பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் கூறினார்.

நீதியை உள்ளடக்கிய தன்மையையும் அனைத்து மக்களின் சமமான வளர்ச்சியையும் வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப நூருல் இஸா  தனது அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக கெஅடிலான் கட்சியின் உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2008-ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பணியாற்றி வருவதால் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளராக நூருல் இஸாவைப் பரிந்துரைப்பது சரியான தேர்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் திறனும் இன, மத வேறுபாடின்றி மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடும் அவரின் குணமும் இதற்கு நல்ல உதாரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமல்லாமல்,இந்திய சமூகத்தின் குரல் முழுமையாக ஒலிக்கச் செய்வதற்கான வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அவர் இன, மதங்களைக் கடந்து அனைத்துச் மூகத்திற்கான வளர்ச்சியை  உறுதிப்படுத்தினார்.

அனைத்துச் சமூகங்களும் எதிர்நோக்கிய கல்வி, வறுமை மற்றும்  வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை முறையாக அணுகிய திறனையும் அவர் வெளிப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக, திவெட் எனப்படும் தொழிற்திறன், தொழில் நுட்பக் கல்விக்கு அவர் ஆதரவு வழங்கினார். இந்நடவடிக்கை இந்திய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயனுள்ள திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு தளமாக அமைந்ததாக சண்மூகம் குறிப்பிட்டார்.

கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கு நூருல் இஸா சரியான தேர்வாக இருப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அவரின் தலைமைத்துவப் பண்பையும் மக்களுக்காக சேவை செயும் மனப்பான்மையையும் கருத்தில் கொண்டு நூருல் இஸா கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.