பெட்டாலிங் ஜெயா, 8 மே – இலக்கவியல் அமைச்சர் மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, தலைமைச் செயலாளர், டான் ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி பின் அபு பக்கர் மற்றும் ஓன் உத்தாமா தலைவர் டான் ஸ்ரீ தியோ சியாங் கோக் ஆகியோர் இணைந்து ஓன் உத்தாமா பேரங்காடியில் மின்னியல் முகப்பிடத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூன்றாவது இடமாக இது அமைகிறது. கியோஸ்க் செந்துஹான் மடானி முயற்சியானது, 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பல்வேறு மின்னியல் முகப்புகளை ஒருங்கிணைத்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சேவைகளை வழங்குகிறது.
இன்று முதல், பார்வையாளர்கள் ஓன் உத்தாமாவில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மடானி டச் மின்னியல் முகப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களது தேவைகளை மக்கள் இந்த மின்னியல் முகப்பின் வழி சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம். பல அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவழிப்பதை விடுத்து, ஒரே இடத்தில் 100 விதமான சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
இதில் 6 மின்னியல் முகப்புகள் உள்ளன. சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), மைடிஜிட்டல் ஐடி (MyDigital ID), பணியாளர் சேமநிதி வாரியம் (KWSP), அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் (ASNB), போஸ் மலேசியா (POS Malaysia) மற்றும் புதிதாக இணைந்த (TM Unifi) ஆகியவற்றிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகின்றன என்று கோபிந்த் சிங் விவரித்தார்.