புத்ரா ஜெயா, மே 9-பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இக்கட்சியின் தலைவரும் பிரதமருமான  டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

தாம் இன்னும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் விரைவில் வேட்புமனுவை தாக்கல் செய்யவிருப்பதாகவும்  இன்று புத்ராஜெயாவில் உள்ள சூராவ் அல்-இமானில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகக் கூறினார்.

இந்நிலையில், இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தல்கள், கட்சியின் உயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து எழுந்த வதந்திகளைப் பற்றி பிரதமர் கருத்துரைக்க மறுத்தார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நூருல் இஸா துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை  ஆதரிப்பார் என்று  தெரிகிறது.

மே 23-ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடுவதாக  பிரதமரின் மகள் நூருல் இஸா அறிவித்துள்ளார்.