கோலாலம்பூர், மே 9-இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 3.1 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவர இலாகா தலைவர் உஸிர் மஹிடின் கூறினார்.

 நாட்டில் மொத்தம் 529 ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் வேலை வாய்ப்புகள் மேன்மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார் .

 நாட்டில் பொருளாதார வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் பிப்ரவரிமாதவாக்கில் மொத்தம் 17.31 மில்லியன் பேர் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் விவரித்தார்.

 இவர்களில் 75.2 விழுக்காட்டினர் அல்லது 12.61 மில்லியன் பேர் நிரந்தர வேலையிலும் எஞ்சியோர் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் இருந்துள்ளனர்.

 இந்நிலையில் சேவைத் துறை அபார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கட்டுமானம், விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் உஸிர் சுட்டிக் காட்டினார்.