கிள்ளான், மே 9-கடந்த ஈராண்டுகளாக காஸாவில் 52 ஆயிரம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து ஆயிரக் கணக்கான அப்பாவிகள் கடும் காயமடைய காரணமாக இருக்கும் இஸ்ரேலின் கொடுங்கோள் தொடர்ந்து வருவது உலகத்தாருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
உலகின் எந்த நடைமுறை சட்டத்தையும் மதிக்காமல் மனம் போன போக்கில் இன அழிப்பு அராஜகத்தை நடத்திவரும் இஸ்ரேலின் நோக்கமே காஸா முனையிலிருந்து பாலஸ்தீன மக்களை அகற்றி அந்த வட்டாரத்தை அபகரித்துக் கொள்ள திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புப் போருக்கு அமெரிக்க உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாகும்.
சொந்த நாட்டிலிருந்து விரட்டப்படும் பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கு இஸ்ரேய்ல் பதில் சொல்லியாக வேண்டுமென சந்தியாகோ காட்டமாகக் குறிப்பிட்டார்.