பாசிர் கூடாங், மே 9-ரஷ்யாவின் இன்டிரைவ் , மெக்சிம் ஆகிய இரு இ-ஹெய்லிங் நிறுவனத்தின் செயல்பாடுகள் வரும் ஜூலை 24 முதல் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்ச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இவ்விரு இ-ஹெய்லிங் நிறுவனங்களும் நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் 2010 (சட்டம் 715) இன் கீழ் உரிம நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் செயல்பாடுகளை நிறுத்த கோரி நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் கடிதங்களை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவு குறித்து அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
எனினும் , மேல்முறையீட்டை போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் தான் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார் .
கெம்பாஸ் பாரு-பாசீர் கூடாங் கார்கோ சேவை இயக்கத்திற்கான வழித்தடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை, மலேசிய பி-ஹெய்லிங் சேவை சங்கம் இந்த இரு இ-ஹெய்லிங் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
இரு இ-ஹெய்லிங் தளங்களும் சட்டங்களின் கீழ் விதிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து சேவைகளை வழங்குவதாக அவர்கள் புகார் கூறினர்.
மலேசிய சட்டத்தின்படி, அவர்களின் ஓட்டுநர்களுக்கு செல்லுபடியாகும் பொதுச் சேவை வாகன தொழிற்கல்வி உரிமம் இருப்பதை உறுதி செய்யாததும் இதில் அடங்கும்.
நில போக்குவரத்து நிறுவனத்தின்படி, இரண்டு மின்-ஹெய்லிங் நிறுவனங்களும் நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் 2010 (சட்டம் 715) இன் கீழ் உரிம நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது.