கோலாலம்பூர், மே 10 எஸ்பிஎம் முடித்த மலாய்க்கார மாணவர்கள் 6ஆம் படிவம் செல்வதற்குப் பதிலாக மெட்ரிகுலேஷன்  கல்வியை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக மெட்ரிகுலேஷன் கல்வி முறை பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பின் தங்கிய மலாய் மாணவர்களைக் கைதூக்கி விடும் திட்டமே அதுவாகும். அதில் சிறப்பான தேர்ச்சியை அடைந்த மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் மெட்ரிக் கல்வியைத் தொடர முடியாத நடைமுறை அரசினால் பின்பற்றப்பட்டுவருகிறது.

அதில் 10ஏ கிடைத்த மலாய்க்காரர் அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என பிரதமரின் வாக்குறுதிக்கு மாறாக நடைமுறை மாற்றப்பட்டுள்ளது சுட்டிக் காட்டப்படுகிறது.

கடந்தாண்டு மலாய்க்கரரர் அல்லாத மாணவர்கள் பலருக்கு 9ஏ மற்றும் 1பி கிடைத்திருந்தும் மெட்ரிக் வகுப்புகளில் சேர்க்கப்படவில்லை என்று மலாயா பல்கலைக்கழக உமானி எனும் மாணவர் அமைப்பின் தலைவர் லின் ஜிங் ஜெெட்  சாடியுள்ளார்.

இந்தப் புதிய நடைமுறையானது மலாய்க்காரர் அல்லாத மாணவர்களின் கல்வியை முடக்கும் திட்டம் என்று கூறி அதனை ரத்து செய்து தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிக் கல்விக்கு வாய்ப்பைத் தர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்