மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழர் தேசிய துயர நாளில் நடிகர் விசால் திரை கலைஞர்களோடு பங்கேற்கும் “நட்சத்திர இசை திருவிழா கொண்டாட்டம்” நடைபெறுவதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாக கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோல் அரசால் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த கறுப்பு நாளை உலகத் தமிழர்கள் தேசிய துயர நாளாக அனுசரிக்கும் வேளையில், அதே நாளில் “இசை திருவிழா” கொண்டாட்டமாக அதுவும் தமிழ்நாட்டிலே கொண்டாடப்படுவது மிகப்பெரிய அநீதியாக இருக்கிறது என்றார்.

உலகத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த நாளில் கொண்டாட்டம் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும். அல்லது தேதி மாற்றம் செய்யப்பட வேண்டும். தமிழர்களுக்கு தாங்கள்தான் அறன் என வார்த்தைக்கு வார்த்தை கூறிக் கொள்ளும் தமிழக அரசு தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தமதறிக்கையில் தெரிவித்துக் கொண்டார்.