பியூனோஸ் அயர்ஸ், அக்.6 –
2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெறுவதில் அர்ஜெண்டினா கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற தென் அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா கோல் ஏதுமின்றி பெருவுடன் சமநிலைக் கண்டது.
இதனால் பட்டியலில் அர்ஜெண்டினா ஆறாவது இடத்துக்கு இறக்கம் கண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில் எஞ்சிய மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் அணி, பிலே ஆப் சுற்றில் ஒசேயனியா மண்டலத்தில் இருந்து தகுதிப் பெற்றுள்ள நியூ சிலாந்தை எதிர்கொள்ளும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிப் பெற முடியும். பட்டியலில் பெரு தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் பட்சத்தில் அர்ஜெண்டினா , அடுத்த ஆண்டில் ரஷ்யாவில் கால் பதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள இறுதி தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா, இக்குவாடோரை சந்திக்கவுள்ளது. அதேவேளையில் பெரு, கொலாம்பியாவை சந்திக்கவுள்ளது. பெரு தனது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
லியோனெல் மெஸ்சி இல்லாத உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை ரசிகர்கள் கற்பனையில் கூட நினைத்து பார்க்க மாட்டார்கள். அந்த நிலை வந்து விடக்கூடாது என்பதில் அர்ஜெண்டினா கவனமாக இருக்கும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.