கோலாலம்பூர், ஜூன் 15-

கல்வியில் முன்னேற்றம் காண விரும்பும் மாணவர்கள் நேரந்தவறாமை உட்பட கட்டொழுங்கை பின்பற்றுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.

வீட்டுப் பாடங்களை சரியான நேரத்தில் செய்து முடிப்பது, தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்வது உட்பட குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும் மனப்போக்கை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

கல்வி ஒன்றே வாழ்வின் ஜீவநாடி. ஒரு குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவது கல்வியே என்று இங்குள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டிலான எஸ்பிஎம் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் கல்வி வாயிலாக மட்டுமே இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனையில் 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜாவால் தொடங்கப்பட்ட ஓர் உன்னத முயற்சியே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

கடந்த 43 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கி இந்திய சமுதாயத்தில் கல்விமான்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருந்துள்ளது.

“கல்வியோடு, இறை நம்பிக்கை, கட்டொழுங்கு ஆகியவற்றையும் விதைத்து பிறர் மதிக்கும் உன்னத பண்பு நிறைந்த மாணவ செல்வங்களை உருவாக்கி வரும் இந்த நிலையத்தின் முன்னாள் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் “என்றார் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாப்பாராய்டு.

இந்திய மாணவர்களை வெற்றிப் பாதைக்கு வழிகாட்டுவதில் இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா, தேசிய கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ், குகனேஸ்வரி, அசோக் வேலு, ராஜேஸ் உள்ளிட்ட இளைஞர் படையினரின் ஆக்கப்பூர்வ ஈடுபாடு பாராட்டுக்குரியது என்றார்.

இக்கருத்தரங்கில் நாடு முழுமையும் இருந்து 450 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பி40 மாணவர்களை கல்வி வாயிலாக உயர்த்த வேண்டும் என்ற தனது இலட்சிய திட்டத்திற்கு ஏற்ப இக்கருத்தரங்கில் பங்கேற்ற இப்பிரிவு மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கின் நிறைவில் வீ. பாப்பாராய்டு பி40 மாணவர்களுக்கான ஸ்ரீ முருகன் நிலையத்தின் இலவச கல்வி திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.