கோலாலம்பூர், ஜூலை 18 –
இந்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப் பள்ளிகள் மிகவும் துணையாக இருக்கும் வேளையில், அதனை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லையென இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார். இந்நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதற்கு அரசியலில் யாருக்குத் துணிச்சல் இருக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு அனைத்து மாணவர்களும் ஒரே பள்ளிக்குச் செல்ல வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது மிகவும் சிரமமான ஒன்று. அவ்வாறு செய்வதற்கு யாரும் இப்போது முன்வருவதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நேற்று தலைநகரில் டி.என். 50 மீதான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சிந்தனையில் உருவான 2050 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய உருமாற்றுத் திட்டம் குறித்து இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. பெட்ரோனாஸ் பணியாளர்கள் இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 250 பெட்ரோனாஸ் பணியாளர்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் தாய் மொழிப் பள்ளிகள் மீதான சூடான விவாதமும் இடம் பெற்றது.
அஸ்லான் எனும் பெயரில் பேசிய ஒருவர், ஒற்றுமைமிக்க நாடு என்ற முறையில் மக்களிடையே மேலும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குத் தாய் மொழிப் பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருந்தார்.
