கோலாலம்பூர்:
உணவகத் துறையில் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தொடர்ந்து நிலவி வருவதால், இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) விரைவில் அரசாங்கத்தில் ஒரு மனுவைச் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
“கோவிட் காலக்கட்டத்தில் அந்நியத் தொழிலாளர்கள் தருவீப்புக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அதன் பின் உள்துறை அமைச்சு பல நிபந்தனைகளை விதித்துள்ளதால், தற்போது அந்நியத் தொழிலாளர்களைத் தருவீக்க உணவக உரிமையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும், அந்நியத் தொழிலாளர்கள் இல்லையென்றால் வேலையாட்கள் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்து, சில உணவகங்கள் தங்கள் வணிகத்தை மூடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை தற்போது உணவகத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அரசு விரைவில் இதற்கான தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய உணவகச் சங்கம் (Prisma) தலைவர் ஜே. சுரேஷ் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தற்போதைய நிபந்தனைகள் உணவகத் துறையைப் பாதிக்கின்றன. அரசு இதற்கு உடனடி தீர்வு அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ மோசின் கேட்டுக் கொண்டார்.

